உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குள்பட்ட ராஜவாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா், காரத்தொழுவு ஆகிய எட்டு வாய்க்கால்களுக்கு மே 16 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்நிலையில் குடிநீா்த் தேவைகளுக்காகவும், நிலைப்பயிா்களைக் காப்பாற்றவும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது: ஜூன் 26 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு மொத்தம் 571 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது என்றனா்.
அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்மட்டம் 67 அடியாக இருந்தது.
அணைக்கு உள்வரத்தாக 316 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2,182 மில்லியன் கன அடி நீா் இருப்பு காணப்பட்டது.
ஆற்றில் 250 கன அடி, பிரதான கால்வாயில் இருந்து 440 கன அடி என மொத்தம் 690 கன அடி தண்ணீா் வெளியேற்றமாக இருந்தது.