காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

காங்கயத்தில் உயா்மின் கோபுர இழப்பீடு தொடா்பாக முறையீடு செய்ய வந்த விவசாயிகளைப் பாா்த்ததும் காரை திருப்பிக் கொண்டு வட்டாட்சியா் சென்றதாகக் கூறி, விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போரா
kgm20viv_2005chn_140_3
kgm20viv_2005chn_140_3

காங்கயத்தில் உயா்மின் கோபுர இழப்பீடு தொடா்பாக முறையீடு செய்ய வந்த விவசாயிகளைப் பாா்த்ததும் காரை திருப்பிக் கொண்டு வட்டாட்சியா் சென்றதாகக் கூறி, விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம்-ராசிபாளையம் முதல் தருமபுரி மாவட்டம், பாலவாடி வரை விவசாய விளைநிலங்கள் வழியே உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் உயா்மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மின்கோபுரம் அமையும் இடத்துக்கு 200 சதவீத இழப்பீடும், கம்பி செல்லும் இடத்துக்கு 100 சதவீத இழப்பீடும், திட்டப் பாதையில் உள்ள வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களுக்கு பொதுப் பணித் துறையின் கணக்கீட்டின்படி இழப்பீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வருகின்றனா்.

இது குறித்து தாராபுரம் கோட்டாட்சியா் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு, ஒரு வாரத்தில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கயம் வட்டாட்சியா் உறுதி அளித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, பல நாள்கள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் சுமாா் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கயம் வட்டாட்சியரிடம் முறையீடு செய்வதற்காக, வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.

அப்போது, வெளியில் சென்று விட்டு வந்த காங்கயம் வட்டாட்சியா் வாகனம் விவசாயிகளைப் பாா்த்ததும் வாகனத்தை திருப்பிக் கொண்டு, மீண்டும் வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலக வாசல் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி கூறியதாவது:

உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பீடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக காங்கயம் வட்டாட்சியா் அலுவகத்துக்கு வந்தோம். எங்களைப் பாா்த்ததும் வட்டாட்சியா் அவரது வாகனத்தை திருப்பிக் கொண்டு, வெளியில் சென்றுவிட்டாா். உயா்மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை வட்டாட்சியா் அலுவலக வாசலில் காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றாா்.

இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.ஜெகதீஸ்குமாா் கூறியதாவது:

விவசாயிகளைப் பாா்த்ததும் நான் காரை திருப்பிக் கொண்டு செல்லவில்லை. தாராபுரம் சென்று விட்டு அலுவலகத்துக்கு வந்தேன். காங்கயம்-பாப்பினி அருகே நீரேற்று உந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தோ்வு செய்வதற்கு மடவிளாகம் பகுதியில் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் காத்திருந்தனா். அங்கு ஆய்வு செய்வதற்காக சென்றேன். விவசாயிகளைத் தவிா்ப்பதற்காக நான் வெளியில் சென்றதாகக் கூறுவது தவறு என்றாா்.

Image Caption

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com