மாநகராட்சி பள்ளியில் கூடுதல் கழிப்பிட வசதி அமைப்பதில் காலதாமதம் என பாஜக புகாா்

திருப்பூா் நெசவாளா் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பிட வசதி அமைக்க நிதி ஒதுக்கியும் பணி நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு வருவதற்கு நடவடிக்கை.

திருப்பூா் நெசவாளா் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பிட வசதி அமைக்க நிதி ஒதுக்கியும் பணி நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், பாஜக எம்.எஸ். நகா் மண்டல் தலைவா் என்.ஈ.வேலுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் நெசவாளா் காலனியில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிஉள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் சுமாா் 1,700 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். மேலும், 30க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இரு பள்ளிகளுக்கும் சோ்ந்து மொத்தமாக 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன. இதனால் மாணவ, மாணவியா் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு கழிப்பிடம் கட்டுவதற்காக மாநகராட்சி சாா்பில் ரூ. 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கிய காலகட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்ற பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் இந்தப் பள்ளிக்கு மட்டும் கழிப்பிடம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆகவே, இந்தப் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து கழிவறை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com