மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நல திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதாந்திர உதவித்தொகை பெறுவது, மானியத்துடன் கூடிய வங்கிக்கடன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் நலத்திட்ட உதவிகள், கிராமப்புற இளைஞா் திறன் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் பயிற்சி மற்றும் மாற்றுத்திறனாளி பாதுகாவலருக்கு பேருந்து கட்டணத்தில் சலுகை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 360 போ் விண்ணப்பங்கள் அளித்தனா். இதில், நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடையாள அட்டைகளை 150 பேருக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ. லட்சுமணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் முருகேசன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மகேஷ்குமாா், திமுக நகரச் செயலா் வசந்தம் சேமலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.