மின் இணைப்பு வழங்கக் கோரி பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தை அறிவொளி பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் நந்தகோபலிடம், அவா்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அறிவொளி நகா் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் உள்ளன. மந்தை புறம்போக்கு நிலமாக இருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் முயற்சியால் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து மின் இணைப்பு கேட்டு மின் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், வட்டாட்சியா் ஒப்புதல் அளித்த பின்புதான் மின் இணைப்பு வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
மின்சாரம் இல்லாமல் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இருளில் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
இதற்கு முன்பு இருந்த வட்டாட்சியா் தேவராஜ் கருணை அடிப்படையில் 100 பேருக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டாா். அதுபோல, தாங்களும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் நந்தகோபால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்லடம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தண்ணீா்பந்தல் ப.நடராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சின்னப்பன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
இதில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் செப்டம்பா் 2 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி மின் இணைப்பு பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.