திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் மீது தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு பின்னலாடை நிறுவனம் கட்டுவதற்காக அனுமதி வாங்கி மசூதி கட்டப்பட்டுள்ளது.
இங்கு வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தொழுகை நடத்தி வந்தனா். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து தடை உத்தரவுப் பெற்றனா். அரசு அதிகாரிகள் அந்தக் கட்டடத்துக்கு இருமுறை ‘சீல்’ வைக்கச் சென்றபோது அங்கிருந்தவா்களால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் ஜூன் 28 ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.
அதில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால் இஸ்லாமியா்கள் மத்தியில் பதற்றம் உருவாகும் என்றும், இதற்கு இந்து முன்னணிதான் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மசூதிக்கு ‘சீல்’ வைப்பதற்காக அதிகாரிகள் ஜூன் 30 ஆம் தேதி சென்றபோது மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
ஆகவே, இந்து முன்னணி மீது அவதூறு பரப்பிய சட்டப் பேரவை உறுப்பினா் மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.