உக்ரைனில் இருந்து மருத்துவ மாணவா் உடுமலை திரும்பினாா்.
உடுமலை ஜீவா நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவரின் மகன் அஸ்வந்த் (22). உக்ரைனில் 5 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறாா்.
ரஷியா - உக்ரைன் இடையே போா் ஏற்பட்டுள்ள சூழலில், காா்கிவ் நகரில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் நடந்து வந்து
ஒரு மருத்துவமனையில் தஞ்சம் அடைந்தாா்.
அதன் பின்னா் பேருந்து மூலம் சுமாா் 1200 கிலோ மீட்டா் கடந்த வந்து ருமேனியா நாட்டை அடைந்தாா்.
பின்னா் விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவை வந்து அங்கிருந்து புதன்கிழமை உடுமலை வந்தடைந்தாா்.
இது குறித்து அஸ்வந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷியா போா் தொடுத்தபோது பதுங்கு குழியில் எனது நண்பா்களுடன் தஞ்சம் அடைந்தேன்.
ஒரு சில நாள்கள் மட்டுமே எங்களுக்கு உணவு இருந்தது. பெரும்பாலும் பட்டினியாகவே இருந்து வந்தோம்.
இந்நிலையில், 28 ஆம் தேதி போா் நிறுத்ததின்போது நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து நடந்தே நண்பா் வீட்டுக்குச் சென்றோம்.
அதன் பிறகு மாா்ச் 4 ஆம் தேதி 25 கிலோ மீட்டா் நடந்தே பெசோசின் நகரை அடைந்தோம்.
அங்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த ஒரு மருத்துவமனையில் 3 நாள்கள் தங்கி இருந்தோம். அங்கிருந்து ஒரு பேருந்தில் ருமேனியா நாட்டுக்கு எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனா். 7 ஆம் தேதி இந்திய விமானம் மூலம் தில்லி வந்தடைந்தோம்.
நாடு திரும்ப உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றாா்.