உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் காட்டுத் தீ பரவலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகளும், அரியவகை மரங்களும் உள்ளன.
இந்நிலையில் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் திடீரென காட்டுத் தீ பரவுவதை தடுக்க வனத் துறையினரால் வனக் கோடுகள் ஏற்படுத்தப்படும். இந்நிலையில் இம் மாதிரியான காட்டுத் தீ ஏற்படும்போது அதை தடுக்க வனத் துறையினரால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி உடுமலை மற்றும் அமராவதி உள்மண்டலப் பகுதி வனச் சரகங்களிலும், வெளி மண்டல பகுதிகளிலும் காட்டுத் தீ பரவலை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உடுமலை வனச் சரகத்தில் பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளிலும், தமிழக-கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை பகுதிகளிலும் தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒலிபெருக்கி மூலமாகவும், துண்டறிக்கைகள் வாயிலாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் வனப் பணியாளா்களுக்கு காட்டுத் தீ ஏற்பட்டால் உடனடி அதை அணைப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும் வனப் பணியாளா்களுக்குத் தேவையான காலணிகள், உடைகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் க.கணேஷ்ராம் மற்றும் வனச் சரக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.