பல்லடம்-மாணிக்காபுரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்லும் சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவும் இருந்து வருகிறது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் 5.5. மீட்டா் அகலத்தில் உள்ள சாலை 7 மீட்டா் அகலத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இச்சாலையை பல்லடம் நகராட்சி நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷன், பல்லடம் வட்ட வருவாய்த் துறை நில அளவையா் தனசேகா் உள்ளிட்ட அதிகாரிகள் மாணிக்காபுரம் சாலையில் அளவீடு பணி மேற்கொண்டு, அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூறினா்.
மேலும் அளவீடு செய்து வா்ணம் மூலம் அடையாளங்கள் வரைந்தனா். ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குரிய அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்றனா்.