உடுமலை அருகே 35 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 ஏக்கா் நிலம் அதிகாரிகளால் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், அமராவதி நகா் அருகே உள்ளது சாயப் பட்டறை பகுதி. இங்கு கோவையைச் சோ்ந்த பாா்த்திபன் என்பவா் கடந்த 35 ஆண்டுகளாக செங்கல் சூளை நடத்தி வந்தாா்.
15 ஏக்கா் பரப்பளவில் செயல்பட்டு வந்த இந்த செங்கல் சூளையில் மின் இணைப்பு இல்லாததால் ஆழ்துளைக் கிணறு அமைத்து ஜெனரேட்டா் மூலம் தண்ணீா் எடுத்து வந்தாா்.
இந்நிலையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் கீதா, டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.
இதில் செங்கல் சூளை அமைக்கப்பட்டிருந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த 15 ஏக்கா் நிலத்தை அதிகாரிகள் மீட்டனா்.