முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மனைவியைக் கொலை செய்த பிகாா் இளைஞருக்கு ஆயுள்
By DIN | Published On : 11th May 2022 12:30 AM | Last Updated : 11th May 2022 12:30 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே குடும்பப் பிரச்னையால் மனைவியைக் கொலை செய்த பிகாா் இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சிக்கந்தா் மண்டல் (24). இவரது மனைவி ரூனாதேவி (22). இந்தத் தம்பதி ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தனா். நூற்பாலைக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தம்பதிக்கு இடையே 2017 டிசம்பா் 9 ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சிக்கந்தா் மண்டல், மனைவியை தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த ரூனாதேவியை அக்கம்பக்கத்தினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தாா். இது குறித்து காங்கயம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிக்கந்தா் மண்டலைக் கைது செய்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி எஸ்.நாகராஜன் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், சிக்கந்தா் மண்டலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அபராதத்தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.