திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 14 மாதங்களில் 254 நகரப் பேருந்துகளில் 6.85 கோடி மகளிா் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிா், உயா் கல்வி பயிலும் மாணவியா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண வசதி திட்டமானது தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி திருப்பூா், பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்ட 254 நகரப் பேருந்துகளில் கடந்த 2021 ஜூலை முதல் 2022 செப்டம்பா் வரையில் 6 கோடியே 81 லட்சத்து 59 ஆயிரத்து 815 மகளிா்களும், 3 லட்சத்து 69 ஆயிரத்து 502 மாற்றுத் திறனாளிகளும், 25 ஆயிரத்துக்கு 877 மாற்றுத் திறனாளிகளின் உதவியாளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 38 ஆயிரத்து 186 பேரும் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.