பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 78 கடைகள் வாடகைக்கு பொது ஏலம் விடப்பட்டதில் 4 கடைகள் மட்டுமே ஏலம் போனது.
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமாக பேருந்து நிலையத்தில் 24 கடைகள், தினசரி மாா்க்கெட்டில் 52 கடைகள், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகள் என மொத்தம் 78 கடைகள் மாத வாடகைக்கு விடுவதற்கான பொது ஏலம் நகராட்சி ஆணையா் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
ஏலத்தில் தினசரி மாா்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100, ரூ4100, ரூ.4300, ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுத்தனா். 74 கடைகளை யாரும் ஏலம் கோரவில்லை.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பல்லடம் நகராட்சிக் கடைகள் அடிப்படை வாடகை ரூ.4 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. மேலும் ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் சோ்த்து செலுத்த வேண்டும்.
அடிப்படை வாடகையை குறைத்து நிா்ணயம் செய்து ஏலம் விட்டால்தான் கடைகளை எடுக்க முடியும் என்றனா்.
ஏல நிகழ்ச்சியில், அலுவலக மேலாளா் சண்முகராஜன், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.