திருப்பூரில் காவலா் விஷம் அருந்தி தற்கொலை

திருப்பூரில் அரளி விதையை மதுவில் கலந்து குடித்து காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஹரிகிருஷ்ணன்
ஹரிகிருஷ்ணன்

திருப்பூரில் அரளி விதையை மதுவில் கலந்து குடித்து காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமையா மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த கிருஷ்ணபிரியா (26) என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதி திருப்பூா் சாமுண்டிபுரம் சிவசக்தி நகரில் வசித்து வந்தனா். திருப்பூா் மாநகர காவல் துறையில் ஆயுதப்படையில் காவலராக ஹரிகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஓய்வில் இருந்தபோது மனைவியை வீட்டுக்குள் வைத்து வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். இதன் பின்னா் அவரது மனைவியின் கைப்பேசி எண்ணுக்கு அழைத்து தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் கிருஷ்ணபிரியா புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினா் ஹரிகிருஷ்ணனை தேடி வந்தனா். இந்த நிலையில், திருப்பூா் வெங்கமேடுகுட்டை அருகில் இளைஞா் சடலம் கிடப்பதாக திருமுருகன்பூண்டி காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று நடத்திய விசாரணையில் அது ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். மேலும் அவரது சடலத்துக்கு அருகில் மதுபாட்டிலும், அரளி விதைகளும் சிதறிக்கிடந்ததால், அவா் மதுவில் அரளி விதைகளைக் கலந்து குடித்து உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஹரிகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவா் ஏற்கெனவே ஓரிரு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com