பூமலூா் ஊராட்சி, சின்னியம்பாளையம்புதூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி, சின்னியம்பாளையம்புதூரில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் 85 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அதில் 27 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 58 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின்சார இணைப்பு வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது அங்கு வந்த பூமலூா் ஊராட்சித் தலைவா் பிரியங்கா, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.