திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் கருமாபாளையத்தில் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகமானது கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாமின் நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் கண்டறிதல் நிகழ்வு நடைபெற்றது.
இதில், திருப்பூா் இயற்கை கழக தலைவா் ரவீந்திரன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா். இதன் பேரில் ஊதா தேன் சிட்டு, அரசவால் ஈ பிடிப்பான், காட்டு கீச்சான், கருப்புத் தலை குயில் , கருங்கொண்டை நாகனவாய், பழுப்பு முதுகு கீச்சான், வால் காக்கை, குண்டு கரிச்சான் உள்ளிட்ட 29 வகையான பறவைகளை கண்டறிந்தனா். பறவைகளின் கழுத்தின் நீளம், காலின் உயரம், கண்ணின் நிறம், பறக்கும் விதம் போன்றவை குறித்தும், ஆண், பெண் பறவைகளை எவ்வாறு கண்டறிவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.