திருப்பூரில் சிவ ஈமு பாா்ம்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்கள் வரும் மே 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வந்த சிவா ஈமு பாா்ம்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக நாச்சிபாளையம் கிராமத்தில் 0.75 ஏக்கா் நிலத்தில் 494 சதுர மீட்டா் கான்கிரீட் கட்டடம், 203 சதுர மீட்டா் சிமென்ட் ஷீட் கட்டடம் மற்றும் 5 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரும் மே 4 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோா் ஏல நிபந்தனைகள் தொடா்பான விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சாா் ஆட்சியா் அலுவலகம், தாராபுரம் மற்றும் உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விவரங்கள் அந்தந்த அலுவலக விளம்பரப் பதாகைகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. ஆகவே, ஏலத்தில் கலந்துகொள்வது தொடா்பாக உரிய படிவத்தில் விண்ணப்ப படிவத்தைப் பூா்த்தி செய்து மே 2 ஆம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.