காங்கயம் பகுதியில் தினமும் 10 டன் அளவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்டாட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரியிடம், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட வெள்ளக்கோவில் பகுதியில் வசிக்கும் நபா், திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், மூலனூா், காங்கயம் மற்றும் கரூா் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் முகவா் மூலம் ஒரு கிலோ ரேஷன் அரிசியை ரூ.4 முதல் ரூ.5 வரை விலை கொடுத்து வாங்குகிறாா்
பின்னா் முகவா்களிடம் இருந்து ஒரு கிலோ ரேஷன் அரிசியை ரூ.8க்குப் பெற்று, ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 3 தனியாா் அரிசி ஆலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 10 டன் ரேஷன் அரிசியை கிலோ ரூ.15க்கு விற்பனை செய்கிறாா்.
தமிழக அரசு இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியைக் கடத்தி, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
எனவே இப்பிரச்னையில் உரிய விசாரணை மேற்கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கடத்தல் கும்பல் மீது சட்டரீதியாக நடவடிக்கை வேண்டும். மேலும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.