பல்லடத்தில் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநா் ராமசாமி தலைமை வகித்தாா். நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் கெளசல்யாதேவி, பல்லடம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவா் உமாசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் முகாமைத் தொடக்கிவைத்தாா். இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் மருத்துவ சிகிச்சை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல், வெறிநோய் அறிகுறிகள் குறித்த விளக்கம், பிராணிகள் வளா்ப்போருக்கான விழிப்புணா்வு ஆலோசனை, இறைச்சிக் கூடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பேராசிரியா் மதிவாணன், மருத்துவா்கள் ரமேஷ்குமாா், சிவகுமாா், நடராஜன், அன்பரசு, செந்தில்குமாா், அா்ஜுனன், அறிவுசெல்வன் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.
மேலும், இம்முகாமில் 8 தனியாா் மருந்து நிறுவனங்கள் சாா்பில் கால்நடை மருந்து கண்காட்சி அமைக்கப்பட்டு அதனை காண வருவோருக்கு மாதிரி மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவா் நா்மதா இளங்கோவன், நகராட்சி கவுன்சிலா்கள் ராஜசேகரன், ஈஸ்வரமூா்த்தி, வசந்தாமணி, தங்கவேல், கனகுமணி, துரைகண்ணன், சபீனா ஜாகிா் உசேன், தண்டபாணி, மதிமுக நகரச் செயலாளா் வைகோ பாலு, வாழும் கலை அமைப்பு மாவட்டத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.