குடியரசு தின விழாவை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் வியாழக்கிழமை (ஜனவரி 26) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குடியரசு தின விழாவை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது செலவினம் மற்றும் திட்டப் பணிகள், கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள்.
எனவே, கிராம பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக தங்களது ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.