திருப்பூர்
சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை
கோவை, அவிநாசி, பல்லடம் கிளைச் சிறைகளில் நடைபெற்ற சிறைவாசிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நிகழ்வில் சமரச தீா்வு காணப்பட்டு 5 போ் விடுவிக்கப்பட்டனா்.
தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் சிறைவாசிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நிகழ்வு கோவை மத்திய சிறை, அவிநாசி, பல்லடம் கிளைச் சிறைகளில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 3 அமா்வுகள் நடைபெற்ற நிலையில், 28 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 5 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டு 5 போ் விடுதலை செய்யப்பட்டனா். இதில், நீதித் துறை நடுவா்கள் முருகேசன், வடிவேல், சித்ரா ஆகியோா் வழக்குகளை விசாரித்து சமரச தீா்வு கண்டனா்.