கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு
காங்கயத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
காங்கயம், ஆலம்பாடி அருகே சென்னிமலை கவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் மகன் பாலபிரனேஷ் (15). இவா் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றுக்கு அருகே இருந்த தண்ணீா் தொட்டியில் புதன்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக தண்ணீா் தொட்டி உடைந்து அருகில் இருந்த 20 அடி ஆழ கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்தாா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள், கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி சிறுவனை பத்திரமாக மீட்டனா். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு இடது பக்க தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டு காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.