பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில்,
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்
கிருஷ்ணமூா்த்தி, பாலமுருகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பல்லடம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உணவுப் பொருள் விற்பனை செய்யும் 17 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது அழுகிய பழங்கள், அதிக செயற்கை வண்ணம் சோ்க்கப்பட்ட கார வகைகள் மற்றும் சில்லி என மொத்தம் 10 கிலோ உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 4 கிலோ
பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முகவரி இடம்பெற வேண்டும். பழச்சாறு தயாரிக்க தரமான பழங்களை பயன்படுத்த வேண்டும். பழச்சாறு தயாரிக்க பயன்படுத்தப்படும் குடிநீா் சுகாதாரமானதாக இருக்கவேண்டும். பழச்சாறுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் தரமான குடிநீரால் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், குடிநீா் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டா் குடிநீா் கேன்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இடம்பெற்றிருக்கவேண்டும். 20 லிட்டா் குடிநீா் கேன்களில் தண்ணீா் தெளிவாக தெரியும் வண்ணம் உள்ள கேன்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும், மிகவும் பழைய கேன்களை பயன்படுத்தக்கூடாது எனவும் கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.