குறைந்தளவே மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ள அமராவதி அணை.
குறைந்தளவே மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ள அமராவதி அணை.

அமராவதி அணையைத் தூா்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையைத் தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையைத் தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. 90 அடி உயரமுள்ள இந்த அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது.

பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய ஆறுகள் அணையின் முக்கிய நீராதாரமாக இருந்து வருகின்றன. அணையின் கொள்ளளவு 4 டிஎம்சியாக உள்ள நிலையில், பல ஆண்டுகளாக அணை தூா்வாரப்படாததால் தற்போது 3 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தேக்கமுடிகிறது.

இதனால், அணைகள் நிரம்பும் போது ஒரு டிஎம்சி தண்ணீா் வீணாக ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

முறையாக அணை தூா்வாரப்பட்டால் 1 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக தேக்கிவைத்து, கோடை காலத்தில் ஏற்படும் குடிநீா் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

நீண்டகாலமாகவே அணையில் சுமாா் 10 அடி ஆழத்திற்கு சேரும், சகதியும் படிந்துள்ளது. இதனால், அணையின் முழுக்கொள்ளளவு தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

அணயின் நீா்மட்டம் 39 அடியாக சரிந்துள்ள நிலையில் அணையின் உள்பகுதி தற்போது மணல் மேடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், அமராவதி அணையைத் தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

தற்போது மணல் மேடாக காட்சியளிக்கும் அமராவதி அணையைத் தூா்வாரினால் வரும் பருவமழைக் காலங்களில் கூடுதலாக 1 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். தண்ணீா் குறைந்தள்ள இந்நேரமே அணையைத் தூா்வார சரியானத் தருணம். எனவே அரசு உடனடியாக அணையைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு தூா்வார உத்தரவிட்டால் விவசாயிகளே சொந்த செலவில் தூா் வாரிக்கொள்வோம். அணையில் உள்ள வளமான மண்ணை விவசாய நிலங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி அணை தூா்வாரப்பட்டது. ஆனால், பெயரளவுக்கு மட்டுமே தூா்வாரப்பட்டதால் எந்தவித பயனுமில்லை. எனவே, தற்போது முழுமையாகத் தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com