தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மர்மக் காய்ச்சலால் இளைஞர் உயிரிழந்தார்.
பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது, மகன் பிரேம்குமார்(20). தனியார் ஆலையில் பணிபுரிந்த இவர், கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, பாளையம்புதூர் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இவருக்கு செவ்வாய்க்கிழமை காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், பிரேம்குமார் அங்கு உயிரிழந்தார்.