பட்டுக்கூடு உற்பத்திக்கான மல்பரி வளர்ப்பில் நவீன நடவு முறையைப் பின்பற்றி பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவுரை வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் உள்ள அரசு பட்டு உற்பத்தி விவசாயிகள் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மல்பரி நாற்று உற்பத்தி கருத்தரங்கில் அவர் பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் 3,171 ஏக்கரில் 2,167 விவசாயிகள் மல்பரி சாகுபடி செய்து வெண் பட்டுக்கூடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். நிகழாண்டில் கூடுதலாக 875 ஏக்கர் பரப்பில் மல்பரி நடவு செய்யப்பட்டுள்ளது. பட்டு வளர்ச்சித் துறை மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10,500, மர மல்பரி நடவுக்கு ஒரு மரத்துக்கு ரூ. 8.75 மானியமாக வழங்கப்படுகிறது.
சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ஏக்கருக்கு ரூ. 22,500 முதல் ரூ. 30 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் புழு வளர்ப்புத் தளவாடங்கள் வாங்கவும், பாலி கிளினிக் அமைக்கவும், நூற்பகம் அமைக்கவும் மானிய உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
நவீன நடவு முறையான பாதுகாக்கப்பட்ட வேர்மண்டல நீர்ப்பாசன முறையில் மல்பரி செடிகளையும், மரங்களையும் நடவு செய்து அதிக உற்பத்தியை விவசாயிகள் பெற வேண்டும் என்றார் விவேகானந்தன்.
பாதுகாக்கப்பட்ட வேர்மண்டல நீர்ப்பாசன முறை இந்தக் கருத்தரங்க வளாகத்தில் செய்து காட்டப்பட்டது. கருத்தரங்கில் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் வெங்கடபிரியா, மாவட்ட வன அலுவலர் க. திருமால், பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாவட்டத் தொழில் மையத்தில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்திலும், பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.