தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கரும்பு சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், எண்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு கரும்பு ஆலை மேலாண் இயக்குநர் கே.கற்பகம் தலைமை வகித்து, கரும்பு சாகுபடியில் அதிக விளைச்சலை பெற சர்க்கரை ஆலை நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து விளக்கமளித்தார்.
வேளாண் அறிவியல் நிலையத் திட்ட அலுவலர் பா.ச.சண்முகம், தருமபுரி மாவட்டத்துக்கு ஏற்ற கரும்பு ரகங்களான கோ 86032, கோ எஸ்ஐ(எஸ்சி) 6, 5, 22, கோ 97009, கோ வி 94101, கோ சி 90063 உள்ளிட்ட ரகங்களை பயிரிட வேண்டும். இந்த ரகங்கள் வறட்சியை தாங்கும் தன்மை கொண்டது எனவும், மகசூல் அதிகரிக்க பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் (உழவியல்) ப.ஐயாதுரை, கரும்பு சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.
கரும்புப் பெருக்கு அலுவலர் பி.வேணுகோபால், கோட்ட கரும்பு அலுவலர் ஆர்.பாண்டியன் மற்றும் திரளான கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.