தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்: சமூக ஆர்வலர் நந்தினி கைது
"சிட்லிங்' மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுக்காத காவல் துறை உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் மதுரை நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நந்தினி அவரது தந்தை ஆனந்தனுடன் செவ்வாய்க்கிழமை காலை தருமபுரி வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்த அவர்கள் காவல்துறை உயர் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதப்பட்ட பதாகையைப் பிடித்துக் கொண்டு திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
தகவலறிந்து வந்த போலீஸார் இருவரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.