தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஆவின் சார்பில் சமச்சீர் தீவனத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் அண்மையில் தொடங்கி வைத்தனர்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் அவரவர் தங்கள் சங்கங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் வீடுகளுக்கு 21 நாள்களுக்கு ஒரு முறை சென்று கறவை மாடுகளின் எடைக்குத் தகுந்தவாறு தீவன அறிக்கை வழங்குவர்.
சமச்சீர் தீவனம் அளிப்பதால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. 10 சதவிகித மீத்தேன் வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது. 7 சதவிகித தீவனச் செலவும் குறைகிறது.
நிகழ்ச்சியில், 5 உள்ளூர் வள நபர்களுக்கு கேடயமும், 200 நபர்களுக்கு தாது உப்புக் கலவைகளும் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லா கான், சார் ஆட்சியர் ம.ப. சிவன் அருள், ஆவின் பொதுமேலாளர் பசவராஜா, மேலாளர் முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.