தருமபுரி மாவட்டம், புழுதிக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.தெய்வநாயகி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.சுருளிநாதன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடராஜன், மேரி சகாயராணி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி செயலர் பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
கீரைகள், பழங்கள், கேழ்வரகு, கம்பு, பச்சைப்பயிறு, கொள்ளு, எள்ளு உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருள்கள் உணவுத் திருவிழாவில் வைக்கப்பட்டு, மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் அடிக்கடி கைகழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடு குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் கேடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
பாலக்கோட்டில்...
பாலக்கோடு ஒன்றியத்துக்குள்பட்ட கம்மாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.சரவணக்குமார் தலைமை வகித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை மாணவ, மாணவியர் தயார் செய்து வந்திருந்தனர். பாரம்பரிய உணவு முறை வகையினையும், அதன் முக்கியத்துவத்தையும் மாணவ, மாணவியருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.