ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தருமபுரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாலை வசதிகளை செய்துத் தர வேண்டும். கேன்டீன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீதிமன்றப் புறக்கணிப்பு தொடரும் என வழக்குரைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.