தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தருமபுரியில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்றார். இதையடுத்து, வழிபாடு முடிந்து சாலை வழியாக கார் மூலம் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
அப்போது, தருமபுரி வழியாக சேலம் செல்லும் வழியில் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அகரம் பிரிவுச் சாலையில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மேடை நின்றவாறு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை வரவேற்று அளித்த மலர்க்கொத்து மற்றும் சால்வைகளை பெற்றார்.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சேலம் சென்றார். முன்னதாக, தருமபுரி ஆட்சியர் சு.மலர்விழி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.