தருமபுரி அரசு போக்குவரத்துக் கழகம் மண்டலம் சார்பில், 7 புதிய பேருந்துகளின் போக்குவரத்து வெள்ளிக்கிழமை தொடங்கி
வைக்கப்பட்டது.
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான் தலைமை வகித்தார். மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், புதிய பேருந்துகளின் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி புறநகர் கிளையிலிருந்து திருவண்ணாமலை முதல் பெங்களூரூ வரை சென்று வர ஒரு பேருந்தும், தருமபுரி புறநகர் கிளையிலிருந்து ஓசூர்-மதுரை வரை சென்று வர 2 பேருந்துகளும், சேலம் அஸ்தம்பட்டி கிளையிலிருந்து சேலம் முதல் ஓசூர் வரை சென்று வர ஒரு பேருந்தும், திருப்பத்தூர் கிளையிலிருந்து திருப்பத்தூர் முதல் பெங்களூரூ வரை சென்று வர 2 பேருந்துகளும், கிருஷ்ணகிரி புறநகர் கிளையிலிருந்து சேலம் முதல் சித்தூர் வரை சென்று வர ஒரு பேருந்தும் என பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 7 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகின்றன என போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி சார்-ஆட்சியர் ம.ப.சிவனருள், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் டி.ஆர்.அன்பழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் பொது மேலாளர் வி.லாரன்ஸ், துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபால், மோகன்குமார், ராஜராஜன், கிளை மேலாளர்கள் ஆசைலிங்கம், ஹர்சபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.