தருமபுரி மாவட்டத்திலுள்ள ஜவகர் சிறுவர் மன்றத்தின் கலைப் பயிற்சிகளில் பங்கேற்க சிறார்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் ஓவியம் மற்றும் 17 மாவட்டங்களில் உள்ள அரசு இசைப் பள்ளி ஆகியவற்றில் இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைப் பிரிவுகளில் முழுநேர சான்றிதழ் பட்டயம் மற்றும் பட்டம் அளிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கலைகளைப் பயிலும் வகையில் பகுதிநேரமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலமாக கலைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்திலுள்ள ஜவகர் சிறுவர் மன்றத்தில் குரலிசை, பரதம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகளில் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தருமபுரி அப்பாவுநகரிலுள்ள (எம்ஜிஆர் நகர் செல்லும் வழி) அரசு நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சேர்க்கை நடைபெறுகிறது. 5 முதல் 16 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமியர் இதில் சேரலாம். பயிற்சிக்கென கட்டணம் கிடையாது. ஆனால், சிறுவர் மன்றத்தில் உறுப்பினராக ரூ. 300 மட்டும் செலுத்த வேண்டும்.
உறுப்பினராகச் சேருவோர் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 94869 88660 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.