சமூக நலத் துறையின் கீழ் நலிவுற்ற பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக நலத் துறை சார்பில், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நலிவுற்றோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதனைப் பெற, விண்ணப்பதாரர் பெயர், முகவரி, வயது, ஜாதி ஆகிய விவரங்களுடன் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதற்கான சான்றுகள், தையல் பயிற்சி குறித்த விவரம், ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகிற பிப்.25-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.