விவசாயத் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அச்சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, தற்போது வரை பல்வேறு தர்னா, ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கை மனுக்கள் அளிப்பது உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிதி போதுமானது அல்ல. எனவே, விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.25 ஆயிரத்தை வழங்க வேண்டும். அதேபோல, தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.