புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட தருமபுரி விளையாட்டு விடுதி மற்றும் பெரியாம்பட்டியில் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை காணொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.84.70 லட்சத்தில் விளையாட்டு விடுதியும், பெரியாம்பட்டியில் ரூ.2.64 கோடியில் ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிகள் அண்மையில் முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இவ்விரு கட்டடங்களையும், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதையொட்டி, தருமபுரி விளையாட்டு விடுதி மற்றும் பெரியாம்பட்டி பள்ளிக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பங்கேற்று குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் சங்கர், விளையாட்டு அலுவலர் ஜி.எஸ்.ராஜேந்திரன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.