சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் அரூர் ஒன்றியச் செயலர் ஆர்.மல்லிகா தலைமை
வகித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது அவர்களின் உரிமையாகும். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கேரளத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, ரா.சிசுபாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பி.சின்னராசு, டி.சேகர், ஒன்றியச் செயலர்கள் கே.தங்கராசு, சி.வஞ்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.