தருமபுரி அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை புதிதாக கூடுதல் சார்பு மற்றும் மகளிர் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன.
தருமபுரி அருகே தடங்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு 13 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இவ் வளாகத்தில் முதல் தளத்தில் கூடுதல் சார்பு நீதிமன்றம், தரைத்தளத்தில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்பட்டு, இவ்விரு நீதிமன்றங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கந்தகுமார் தலைமை வகித்து, கூடுதல் சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்துப் பேசினார். நீதிமன்ற அலுவலகத்தை மோட்டா வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி சீதாராமன் திறந்து வைத்தார். அதேபோல, கூடுதல் மகளிர் நீதிமன்றத்தை, கூடுதல் மாவட்ட நீதிபதி ஜீவானந்தம் மற்றும் நீதிமன்ற அலுவலகத்தை மாவட்ட மகளிர் நீதிபதி பரமராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இப் புதிய நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.மோகனரம்யா, கூடுதல் மகளிர் நீதிபதி ஜி.ரகோத்தமன் ஆகியோர் பொறுப்பேற்றனர். இதையடுத்து, அந்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் தொடங்கி நடைபெற்றன. விழாவில், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.