அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு காவல் ஆய்வாளர் ரா.முரளி தலைமை வகித்து பேசுகையில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், நகைக் கடைகள், தனியார் நிதி நிறுவனங்கள், வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் பொருத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் உயரமான சுற்றுச் சுவர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும். கேமராக்கள் திருடு போனாலும், தகவல்களை பெறும் வகையில் இணையதள வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இரவு மற்றும் பகல் நேரங்களில் தனியார் காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார். இதில், தனியார் கல்வி நிறுவன பணியாளர்கள், வணிகர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.