தருமபுரி, கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை மாலை பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பருவமழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டும் குறைந்தது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, பிழைப்புக்காக நகரங்களை நோக்கி தொழிலாளர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி, கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்தத் திடீர் மழையால், பொதுமக்கள் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர். கிருஷ்ணகிரியில் பெய்த மழையால், மாங்கனிக் கண்காட்சிக்கு பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இந்த மழையால் தருமபுரி, கிருஷ்ணகிரி நகரங்கள் குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.