ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பலி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிக்கிழமை விரைவு ரயிலில் பயணித்தவர் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து சேலம், தருமபுரி வழியாக பெங்களூருக்கு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது. அப்போது, அந்த ரயிலில் சென்ற பயணி ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தருமபுரி ரயில்வே போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர மவுர் (49) என்பதும், அவர் ரயிலில் எஸ்-8 எண் கொண்ட பெட்டியில் பயணித்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் தவறி கீழே விழுந்து இறந்தது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.