பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக 2 பேருக்கு தருமபுரி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்த கருபையன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சின்னசாமி பெங்களூரில் தங்கி பணியாற்றி வந்தார். அவரது மனைவி லட்சுமி பாலக்கோடு அருகிலுள்ள கொள்ளுப்பட்டியில் வசித்து வந்தார். சின்னசாமி குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தை அவரது சகோதரர்கள் சின்னக்குட்டி, மகாலிங்கம் ஆகியோர் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், நிலத்தில் தனக்குரிய பங்கை வழங்குமாறு சின்னசாமி தன் சகோதரர்களிடம் கேட்டுள்ளார். அவரது மனைவி லட்சுமியின் தூண்டுதலால் தான், சின்னசாமி நிலத்தை கேட்பதாக அவரது சகோதரர்கள் கருதியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 2017 நவ. 8-ஆம் தேதி பாலக்கோடு அருகிலுள்ள சேங்கன்மேடு என்ற பகுதியில் சின்னசாமியின் மனைவி லட்சுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவத்தில் சின்னக்குட்டி, மகாலிங்கம் ஆகிய இருவரையும் பாலக்கோடு போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை முடிவுற்றது. இதில், கொலைக் குற்றத்துக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றத்தை மறைத்ததற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைகள் அனைத்தும் இருவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.