அரூரில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக குடியிருப்புப் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
அரூர் நகரின் அருகில் அமைந்துள்ளது பெரிய ஏரி. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நிரம்புவதால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும். அதேபோல அரூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.
இந்த பெரிய ஏரி நிரம்பினால் அதன் உபரிநீர் வெளியேறுவதற்கு பெரியார் நகர், குபேந்திரன் நகர், மஜீத் தெரு, வர்ணீஸ்வரர் கோயில் வழியாக ராஜகால்வாய் செல்கிறது.
இந்த ராஜகால்வாய் செல்லும் வழித்தடத்தில் அரூர் - சேலம் பிரதான சாலையில், தனியார் திருமண மண்டபம் அருகில் வணிகர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனர். அதேபோல, கால்வாயில் நெகிழிப் பொருள்கள், பழைய இரும்புகளை கொட்டி வைத்து தடை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால், ராஜகால்வாய் தூரடைந்து மழைநீர், கழிவு நீர் வெளியேற முடியாத நிலையுள்ளது. எனவே, பெரிய ஏரியின் ராஜகால்வாய் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.