அரசுப் போக்குவரத்துக் கழக ஒசூர் கிளை பணிமனையில் புதன்கிழமை இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் நடைபெற்றது.
ஒசூர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், ஊழியர்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற இம் முகாமுக்கு, மாவட்ட நீதிபதி மற்றும் மக்கள் நீதிமன்ற தலைவர் கே. அறிவொளி தலைமை வகித்துப் பேசினார்.
ஒசூர் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி மோனிகா, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் (எண் 1) கார்த்திக் ஆகியோர் பேசினர்.
இதில், குடும்ப சொத்துத் தகராறு, விவாகரத்து, மோட்டார் வாகனச் சட்டம், குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் செயல்படும் சட்ட உதவி மையம் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு, வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
எனவே, போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், தங்களது பிரச்னைகளை இத்தகைய இலவச சட்ட உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இம் முகாமில், போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.