பால்கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி வருகிற ஆக.27-ஆம் தேதி மறியலில் ஈடுபடுவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் கே.முகமது அலி தெரிவித்தார்.
இதுகுறித்து தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களில் அவர் கூறியது: அனைத்து வேளாண் பொருள்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தும்போது, பால் விலையை மட்டும் உயர்த்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. எனவே, தமிழக அரசு காலதாமதமின்றி, பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.40, எருமை பால் லிட்டருக்கு ரூ.50 என கொள்முதல் விலையை உயர்த்த வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பால் கொள்முதல் செய்யும்போதே, பாலில் உள்ள சத்துக்கள் குறித்து விவரங்களை வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும்.
கால்நடை தீவனங்களை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கப் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்கு 50 சதவீத தொகையை ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற ஆக.27-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், ஆவின் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.
மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, பொருளாளர் எம்.சங்கர், துணைத் தலைவர் எம்.ஆறுமுகம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.என்.மல்லையன் ஆகியோர் உடனிருந்தனர்.