அரூரில் சந்தன மரம் வெட்டியதாக சுரேஷ் (35) என்பவரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அரூர் வட்டம், எட்டிப்பட்டி - ஆண்டிபட்டி புதூர் செல்லும் வனப் பகுதியில் மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரை பிடித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் எட்டிப்பட்டி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டியும், ஏற்கெனவே வெட்டப்பட்ட சந்தன மரங்களின் வேர்களை பறித்ததும் தெரியவந்தது.
மேலும், பிடிபட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் சுரேஷ் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷை வனத்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 15.5 கிலோ எடையுள்ள சந்தன மரத் துண்டுகள், சந்தன மர வேர்கள், இரு சக்கர வாகனம், கொடுவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு ரூ. 38 ஆயிரமாகும். இதையடுத்து, சுரேஷை வனத்துறையினர் கைது செய்தனர்.