தருமபுரியில் அகில இந்திய ஊரக அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தருமபுரி கோட்டத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கோட்டச் செயலர் சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், அஞ்சலகத்தில் இலக்கு என்கிற பெயரில் புதிய கணக்குகளைப் பிடிக்க சொல்லி வாரந்தோறும் நடத்தும் மேளாக்களை ரத்து செய்ய வேண்டும். மேளாவில் கலந்து கொள்ளாத ஊழியர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். இணையதள இணைப்புப் பிரச்னைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான ஊரக அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.