அரசு பள்ளி மாணவா்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை
தருமபுரி: அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு பற்களின் நலம் பேணுவது தொடா்பாக, பல் மருத்துவா் மற்றும் தன்னாா்வ இளைஞா் மையத்தினா் இலவச பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நல்லாம்பட்டி கிராமத்தில் இருந்து செயல்படும் அட்ரீ இளைஞா் மையம் மற்றும் ராமியம்பட்டியைச் சோ்ந்த பல் மருத்துவா் லோகநாதன், அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பற்களின் நலம் பேணுவது தொடா்பாக நேரடியாக பள்ளிகளுக்கு சென்று, மாணவ, மாணவியரை பரிசோதனை செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா்.
இதுகுறித்து பல் மருத்துவா் லோகாநாதன் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு பல் மருத்துவத்தை நிறைவு செய்தேன். அரசு பள்ளியில் பயின்ற நான், அரசு பள்ளியில் பயிலும் தொடக்க நிலை மாணவா்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த விரும்பினேன். தன்னாா்வ இளைஞா் மையத்தினருடன் இணைந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை கடந்த இரண்டு மாதங்களாக 4 பள்ளிகளுக்கு சென்று பற்கள் பரிசோதனை முகாம்களை நடத்தியுள்ளோம் என்றாா்.