கோம்பூர் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோம்பூர் அருகே அரூர் }சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கல்லூரி மாணவர்கள் மூவர், ஒரே இருசக்கர வாகனத்தில் சேலத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது, சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கொட்டுக்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திருப்பதி மகன் அரவிந்தன் (19), குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமலை மகன் ராஜேஷ் (19), பாவக்கல் அருகேயுள்ள கரியபெருமாள் வலசை கிராமத்தைச் சேர்ந்த பலராமன் மகன் நித்திஷ் (19) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த மாணவர்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத லாரி மோதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் நடந்திருக்கலாம் என அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் அரூர் டி.எஸ்.பி. ஏ.சி.செல்லப்பாண்டியன் விசாரணை மேற்கொண்டார்.
கல்லூரி மாணவர்களின் சடலங்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.